நெல்லை நகரத்தில், குழந்தைகளுக்காகவே அருள்புரியும் ஒரு தனிச்சிறப்பு ஆன்மிகத் தலம் பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள பிட்டாபுரத்தி அம்மன் கோவில், குழந்தைகளின் உடல்நலம் மற்றும் வளர்ச்சிக்காக பெற்றோர்கள் அதிகமாக நாடும் கோவிலாக விளங்குகிறது. இந்த அம்மன், பிட்டாபுரத்தி அம்மன், வடக்குவாசல் செல்வி அம்மன், செண்பகச்செல்வி அம்மன் என பல பெயர்களில் பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.
இந்த கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக, பெண்களுக்கு “தீட்டு” என்ற நடைமுறை இல்லாதது குறிப்பிடத்தக்கது. மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் எந்தத் தடையும் இன்றி வந்து வழிபடலாம் என்பதால், இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், குழந்தைகளுக்கான தனிச்சிறப்பு வழிபாடுகள் இங்கு நடைபெற்று வருகின்றன.
கோவிலின் பின்புறத்தில், குழந்தைகளின் கண் திருஷ்டி நீங்க, உடல்நல குறைகள் சரியாக “மை வைக்கும்” வழிபாடு நடத்தப்படுகிறது. இதனுடன் குழந்தைகளின் கைகளில் காப்பு கயிறு மற்றும் இடுப்பில் பாதுகாப்பு நூல் கட்டப்படுகிறது. சாப்பிடாமல் சிரமப்படுத்தும் குழந்தைகளுக்காக, கோவிலில் தயிர் சாதம் அல்லது உணவு ஊட்டப்பட்டு, மீதமுள்ள உணவை அங்குள்ள நாய்களுக்கு வழங்கும் வழக்கம் உள்ளது. இந்த வழிபாட்டுக்குப் பிறகு குழந்தைகள் நன்றாக சாப்பிடத் தொடங்குவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
சாதி, மத பேதமின்றி தினமும் 50 முதல் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இங்கு வந்து வழிபடுகின்றனர். மருத்துவத்தால் தீராத பிரச்சினைகளுக்கும் நம்பிக்கை ஒரு தீர்வாக அமையும் எனக் கருதும் மக்கள், இந்த கோவிலை “குழந்தைகளின் நலக் காப்பகம்” என மதித்து வருகின்றனர். நம்பிக்கையும் ஆன்மீகமும் இணையும் இந்த பிட்டாபுரத்தி அம்மன் கோவில், நெல்லை நகரின் மற்றொரு முக்கிய அடையாளமாக உருவெடுத்து வருகிறது.
Read more: ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும்.. மாதம் ரூ. 3,000 ஓய்வூதியம்..! மத்திய அரசின் புதிய திட்டம்..!



