சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீது மர்ம நபர்கள் லேசர் ஒளி அடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று 4வது முறையாக, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் 288 வகை விமானம் தரையிறங்கும் தருவாயில் அதன் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது.
விமானி சிறிது நேரத்துக்கு பார்வை தடுமாறிய போதும், சூழ்நிலையை சரியாக மதிப்பீடு செய்து விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடிந்தது. பின்னர், இந்த விவகாரம் குறித்து விமானி அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளார். பொதுவாக விமானங்களை தரையிறக்கும் சமயத்தில் பசுமை அல்லது சிவப்பு நிற லேசர் ஒளி செலுத்தப்படுவது விமானிகளின் பார்வையை பாதித்து அபாயகரமான சூழ்நிலைகளை உருவாக்கும். இது விமான பாதுகாப்புக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
விமானங்கள் மீது லேசர் ஒளி செலுத்துவது இந்திய விமான போக்குவரத்து சட்டங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரானது. இது தவிர்க்க முடியாதபடி சிறைத்தண்டனையையும், அபராதத்தையும் அளிக்கக் கூடிய குற்றமாகும். முன்னதாக சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள் மற்றும் லேசா் ஒளியை பயன்படுத்த விமான நிலைய நிா்வாகம் தடை விதித்துள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலைய நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானம் தரையிறங்கும்போது கீழேயிருந்து லேசா் ஒளியை செலுத்தினால், விமானிக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், விமான நிலையம் அருகே அதைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகளை மீறி லேசா் மற்றும் பலூன்களை விமான நிலையம் அருகே பயன்படுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more: தொலைத் தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறித்த அறிக்கை வெளியீடு…!