ஆந்திர மாநிலத்திலுள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியிலுள்ள தனுசு மண்டலத்தில் வேணுகோபால் சுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் ராம் நவமி விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கோவிலில் தான் சற்று முன்பு தீ விபத்து நடைபெற்றிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இங்கு ராம நவமி திருவிழா நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் மேலும் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்கு நிழல் வேண்டி பந்தல் போடப்பட்டிருக்கிறது. அந்தப் பந்தலின் மீது விழாவின்போது தெரியாமல் பட்டாசு விழுந்து வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
தீ விபத்து ஆரம்பத்தில் பரவுவதை கவனித்து பக்தர்கள் மற்றும் கோயிலில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றியதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. காயம்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயிலில் இருந்து அனைத்து பக்தர்களையும் உடனடியாக வெளியேற்றி தற்போது தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு துறையினர் காவல்துறையினுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் விரைவாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் முதல் கட்ட தகவல்கள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ள நிலையில் எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது என்ன மாதிரியான சேதங்கள் இருக்கின்றன என்பது போன்ற எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. கோவிலில் ராம நவமி திருவிழாவின் போது ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி மக்களிடையே அச்சமும் சுகமும் நிலவுகிறது.