ஈரான்-இஸ்ரேல் போரில் ‘இராணுவத் தலையீடு’ குறித்து அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா செய்தியாளர்களிடம் பேசிய போது “இந்த சூழ்நிலையில் ராணுவத் தலையீடு குறித்து நாங்கள் குறிப்பாக வாஷிங்டனை எச்சரிக்க விரும்புகிறோம், இது உண்மையிலேயே கணிக்க முடியாத எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
புதன்கிழமை, ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இஸ்ரேலுக்கு நேரடி இராணுவ உதவி வழங்குவதற்கு எதிராக அமெரிக்காவை எச்சரித்தார். “இதுபோன்ற ஊக, கற்பனையான விருப்பங்களுக்கு எதிராக கூட வாஷிங்டனை எச்சரிக்கிறோம். இது முழு சூழ்நிலையையும் தீவிரமாக சீர்குலைக்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், ஈரானிய அணுசக்தி உள்கட்டமைப்பு மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் உலகத்தை பேரழிவில் ஆழ்த்தக்கூடிய செய்தி என்று ஜகரோவா கூறினார். மேலும் “அணுசக்தி நிலையங்கள் தாக்கப்படுகின்றன. ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ஏற்கனவே குறிப்பிட்ட சேதத்தை குறிப்பிட்டுள்ளது என்றும் கூறினார்.
உலக சமூகத்தின் (கவலை) எங்கே இருக்கிறது? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் எங்கே? அவர்கள் தொலைவில் இருப்பதாகவும், இந்த (கதிர்வீச்சு) அலை அவர்களை அடையாது என்றும் அவர்கள் நினைக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. சரி, ஃபுகுஷிமாவில் என்ன நடந்தது என்பதை அவர்கள் படிக்கட்டும்,” என்று அவர் 2011 இல் ஜப்பானிய அணுமின் நிலையத்தில் நடந்த விபத்தைக் குறிப்பிட்டு அவர் எச்சரித்தார்..
ஈரானை தாக்க அமெரிக்கா திட்டம்?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் ஈரானிய அணுசக்தி தளங்களுக்கு எதிரான தாக்குதல்களில் இஸ்ரேலுடன் இணையக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரான் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் அவர் தனது இறுதி முடிவு நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை முன்னதாக, ட்ரம்ப், ஈரானை ‘நிபந்தனையின்றி சரணடைய’ அழைப்பு விடுத்தார், மேலும் அமெரிக்காவிற்கு தெஹ்ரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது சரியாகத் தெரியும் என்றும், ஆனால் அவர் “இப்போதைக்கு” கொல்லப்படுவதை விரும்பவில்லை என்றும் ட்ரம்ப் கூறினார்.
ஈரான் – இஸ்ரேல் மோதல்
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் அணு உற்பத்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் உள்ளிட்ட பல உயர் ரக இலக்குகளை குறித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஈரானும் தொடர்ந்து பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்று ஈரானின் அரக் கன நீர் அணு உலை மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தியது.. இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் தெற்கு நகரமான பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனை மீது ஈரான் ஒரு பெரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 50 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. டெல் அவிவ் அருகே உள்ள நகரங்களில் கூடுதல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் மருத்துவமனை தாக்குதலுக்கு கடுமையாக பதிலளித்தார். இந்த தாக்குதலுக்கு, ஈரான் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : “ஈரான் உச்ச தலைவர் இனியும் இருக்கக்கூடாது..” இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை..