மத்திய மும்பையின் லால்பாக் பகுதியில் 24 வயது இளம் பெண் ஒருவர் தனது தாயினை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரிம்பிள் ஜெயின் என்ற 24 வயது பெண்மணி தனது தாயாருடன் மும்பையின் லால் பாக் பகுதியில் வசித்து வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக அவரது தாயாரின் சகோதரர் தனது சகோதரியை பார்க்க வேண்டுமென ரிம்பிள் ஜெயின் இடம் கூறியுள்ளார். அவர் கேட்கும் போதெல்லாம் அம்மா வீட்டில் இல்லை என சொல்லி சமாளித்திருக்கிறார் ஜெயின். இதனைத் தொடர்ந்து நேற்று அவர் தனது சகோதரியை சந்திப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த அந்த நபர் இது தொடர்பாக காலா சௌக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் டிம்பிள் ஜெயின் வீட்டிற்கு வந்து விசாரணை செய்துள்ளனர்.
அப்போது வீட்டின் கப்போர்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கபோர்டை சோதனை செய்தபோது அதிலிருந்து அழுகிய உடல் பாகங்கள் பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வீட்டிலிருந்த தண்ணீர் ட்ரம்மில் இரண்டு கால்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர் போலீசார். மேலும் உடல் பாகங்களை வெட்டுவதற்கு அவர் பயன்படுத்திய டைல்ஸ் கட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடல் பாகங்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் தாயாரை கொலை செய்ததாக ரிம்பிள் ஜெயின் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அந்தப் பெண்மணி இறந்த உடலுடன் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வசித்து வந்திருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.