மும்பை அருகிலுள்ள கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் லலித் உஜ்ஜைன்கர். இவர் திவாவைச் சேர்ந்த கிரண் சோனாவானே என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்திருந்தனர். இதனால் கிரண், ஆதித்யா என்பவருடன் பழகி வந்துள்ளார். அதோடு இவரும் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் லலித், அந்தப் பெண்ணிடம், ஆதித்யாவுடன் பழகுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் தன்னை காதலிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண் மறுத்துவிட்டார். அதோடு இருவரும் காதலித்தபோது கிரண், லலித்திடம் ஒரு நாய்க்குட்டியைக் கொடுத்திருந்தார். அது தனக்கு திரும்ப வேண்டும் என்று கிரண் கேட்டுள்ளார். அதோடு அதை வாங்க வீட்டுக்கு வருவதாக லலித்திடம் தெரிவித்திருந்தார்.

இதனால், லலித் தன்னுடைய நண்பர்கள் 3 பேரை வீட்டுக்கு வரவழைத்திருந்தார். கிரண் தன் புதிய காதலன் ஆதித்யாவுடன் லலித் வீட்டுக்கு வந்துள்ளார். லலித் வீட்டில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. புதிய காதலனைக் கைவிடச்சொல்லி லலித் தகராறு செய்தார். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. லலித்தும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து ஆதித்யாவை அடித்து உதைக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து ஆதித்யாவை குத்திக் கொலை செய்துவிட்டு 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கிரண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் ஒரு குற்றவாளி மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கியக் குற்றவாளி லலித் மத்தியப் பிரதேசத்துக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவனைக் கைது செய்ய இரண்டு தனிப்படை போலீசார் மத்தியப்பிரதேசம் விரைந்திருக்கின்றனர்.