சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (45). இவருக்கு திருமணமான நிலையில் ராம்நகர், சக்திநகரில் வசித்துக்கொண்டு, ஒரு ஷேர் மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கருமலைக்கூடலைச் சேர்ந்த 25 வயதான கல்லூரிப் பட்டதாரிப் பெண் ஒருவர் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார்.
அந்த இளம்பெண் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த அருள்பிரகாஷ், அப்பெண்ணை மிரட்டி, அலுவலகத்தின் மாடியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ச்சியாக, மிரட்டல் மூலமாக அவர் அப்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி அந்த இளம்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதைக் கேள்விப்பட்ட அருள்பிரகாஷ், அந்தத் திருமணம் நடைபெறக் கூடாது என்ற தீய நோக்கத்துடன், அலுவலகம் வந்த அப்பெண்ணை மிரட்டி, கட்டாயப்படுத்தி கடத்திச் சென்றுள்ளார்.
பின்னர் இளம்பிள்ளை என்ற இடத்தில் வைத்து, அப்பெண்ணை மிரட்டி, தான் மட்டுமே திருமணம் செய்துகொள்வதாக வற்புறுத்தியுள்ளார். அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்த நிலையில், “உன்னுடன் நான் பழகிய விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன்” என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர், அப்பெண்ணைத் தனது உறவினரான மகாலட்சுமி என்பவரது வீட்டில் பூட்டி வைத்துச் சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில், எறும்பு சாக்பீசை உட்கொண்டுள்ளார். இதனால், மயங்கி விழுந்த அவரை மேச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தகவல் அறிந்த பெற்றோர் மகளை மீட்டுச் சென்ற பின்னரே, அருள்பிரகாஷ் தன்னை மிரட்டிப் பாலியல் வன்புணர்வு செய்த விவரத்தை அப்பெண் பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் நேற்று முன்தினம் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில், அருள்பிரகாஷ் ஆசை வார்த்தை கூறி மிரட்டிப் பலமுறை உடலுறவு கொண்டதுடன், கடத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தற்கொலைக்குத் தூண்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். புகாரைப் பதிவு செய்த காவல்துறையினர், ஷேர் மார்க்கெட் அதிபர் அருள்பிரகாஷைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



