மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் உள்ள கோயில் கூரையின் ஒரு பகுதி இடிந்து இன்று விழுந்தது. பர்பானி மாவட்டம், மன்வத் தாலுகாவில் உள்ள யஷ்வாடி தேவஸ்தான சன்ஸ்தான் கோயிலுக்கு எதிரே கட்டப்பட்டு வந்த மண்டபத்தின் தூண் ஒன்று இன்று மதியம் (ஜூன் 20) திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கு அடியில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 5 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர், மேலும் மற்றவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இச்சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் பலத்த காயமடைந்ததாகவும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும், சேதத்தின் அளவை மதிப்பிடுவதோடு, இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரை இடிந்து விழுந்ததற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இது குறித்த கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் வழிபாட்டிற்காக யஷ்வாடி ஆலயத்திற்கு வருகை தருகின்றனர். இன்றும் பிரார்த்தனைக்காகக் கோயில் வளாகத்தில் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், பிரதான ஆலயத்திற்கு முன்பாகக் கட்டப்பட்டு வந்த மண்டபத்தின் தூண் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததால், அப்பகுதியில் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மன்வத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஷிண்டே தனது குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினார்.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன.. காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாகமும் காவல்துறையினரும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
Read More : வங்கதேசத்தில் ராமர் படம் அவமதிப்பு..! ஆயிரக்கணக்கான இந்துக்கள் மாபெரும் போராட்டம்.. பரபரப்பு..!



