கோயமுத்தூரில் வெப்ப சலனம் காரணமாக கடந்த 2 வாரங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்ற வாரம் இடையார்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்து பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பின்னர் இந்த வாரம் முழுவதும் பிற்பகலில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி இன்று கோவை மாநகரில் உக்கடம், கரும்பு கடை, குனியமுத்தூர், ரயில் நிலையம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக, உக்கடம், கரும்பு கடை போன்ற பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து இருண்டதன் காரணமாக, வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.
உக்கடம், கரும்புக்கடை போன்ற பகுதிகளில் மேம்பால பணிகள் நடந்து வருவதன் காரணமாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை மேம்பாலங்களுக்கு அடியில் நிறுத்திவிட்டு ஒதுங்கினர். அதே சமயம் மேம்பாலங்களில் இருக்கக்கூடிய துறைகளில் இருந்து விழுந்த மழை நீர் தொடர் நீர்வீழ்ச்சிகளை போல காட்சி அளித்தது.