”ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் விஜய் கண்டிப்பாக வருவார்” என பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பம். பல்வேறு விதங்களில் அதனை தெரியப்படுத்துவதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், விஜய் அது குறித்து இப்போது வரை வாய் திறக்கவில்லை. ஆனால், அவரது தந்தை மட்டும் அவ்வப்போது விஜய் அரசியலுக்கு வருவார் என ரசிகர்களுக்கு தகவல் கொடுப்பார். ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் அறிவிப்புக்கு பின் தங்களது தலைவரும் அரசியலில் குதிக்க வேண்டும் என்ற ஆசை விஜய் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.

நடிகர் விஜய்யும் வெளிப்படையாக அரசியல் குறித்து அறிவிக்காவிட்டாலும், ரசிகர் மன்றத்தை எல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என ஒருங்கிணைத்து, கொடி அறிமுகம் செய்து வழிநடத்தி வருகிறார். முழுமையான இயக்கமாக அது செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, இயக்கத்தின் இணையதளம் தொடங்கப்பட்டு பலரையும் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ”ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் விஜய் கண்டிப்பாக வருவார். தற்போது எதிர்க்கட்சிகளின் இடம் காலியாக உள்ளது. 2026 தமிழ்நாட்டில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்” என பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.