தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் துக்குகுடாவில் உள்ள ‘பிரைம் கேர்’ தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் செவிலியர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 34 வயது மெக்கானிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
துக்குகுடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏழு மாதங்களாக செவிலியராக பணியாற்றி வந்தவர் யூகே ஷிரீஷா (21). மருத்துவமனை நிர்வாகம் அருகிலேயே ஏற்பாடு செய்திருந்த தங்குமிடத்தில் சக ஊழியர்களுடன் தங்கி பணிபுரிந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இரவு பணி முடிந்து அறைக்கு திரும்பிய ஷிரீஷாவை, அடுத்த நாள் சக ஊழியர்கள் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக ஊழியர் ஒருவர் அவரது தங்குமிடத்திற்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது, முகத்தில் காயங்களுடன் ஷிரீஷா சடலமாக கிடப்பது தெரியவந்தது. உடனடியாக தகவல் அறிந்து வந்த போலீசார், 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணையை தொடங்கினர்.
ஷிரீஷா தங்கியிருந்த வீட்டிற்கு அருகே உள்ளவர்களிடம் நடத்திய விசாரணை மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில், அருகிலிருந்த மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த எம்.டி. சனாவுல்லா கான் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஆபாச வீடியோக்களுக்கு அடிமையான சனாவுல்லா கான் நீண்ட நாட்களாக ஷிரீஷாவை நோட்டமிட்டு வந்ததும், அவரது செல்போனில் 3,000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் அப்பகுதி பெண்களை ரகசியமாக எடுத்த ஆட்சேபனைக்குரிய படங்கள் இருந்ததும் தெரியவந்தது.
சம்பவத்தன்று ஷிரீஷாவுடன் தங்கியிருந்த மற்றொரு பெண் ஓணம் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்ததை அறிந்த குற்றவாளி, நள்ளிரவில் ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்து ஷிரீஷாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவர் கூச்சலிடாமல் இருக்க மூக்கு மற்றும் கழுத்தை பலவந்தமாக அழுத்தியதில் எலும்புகள் உடைந்து ஷிரீஷா சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தார். கொலையை மறைத்துவிட்டு தனது கடை முதலாளியிடம் பெட்ரோலுக்கு அவசரமாக பணம் வாங்கி தப்பியோட முயன்ற சனாவுல்லா கானை, சம்பவம் நடந்த 30 மணி நேரத்திற்குள் போலீசார் மடக்கிப் பிடித்து சிறையில் அடைத்தனர்.
Read More : இந்திய விமானப்படையை தாக்கிய பாகிஸ்தான் பயங்கரவாதி..!! ஸ்கெட்ச் போட்டு சுட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படை..!!



