முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சொத்து விற்பனை, வாடகை ஒப்பந்தம், கடன் பத்திரம் என பல்வேறு வகைகளில் முத்திரைத்தாள் பயன்படுத்தப்படுகிறது. முத்திரைத்தாள்களில் குறிப்பிட்டுள்ள விலை அடிப்படையிலேயே அதனை விற்பனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கூடுதல் விலைக்கு விற்பதாக எழுந்துள்ள புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைகேடை தடுப்பதற்கு முத்திரைத்தாள் விற்பனை செய்யப்படும் இடங்களில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் எனவும் அதில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.