உலகின் டாப் பணக்காரரான எலான் மஸ்க், தனது பெயரில் பெயரில் புதிய நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அவர் 3500 ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதாகவும் அமெரிக்காவின் தனியார் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். இவர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவன தலைவராக இருக்கிறார்.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். அதன்பின்னர், ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்து பல்வேறு சர்ச்சை கருத்துக்களுக்கு ஆளானார். இந்தநிலையில், எலான் மஸ்க் தனது பெயரில் புதிய நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அவர் 3500 ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், போரிங் கோ., டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை ஒரே நகரத்தில் தங்க வைப்பதற்காக புதிய நகரத்தை உருவாக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக 3500 ஏக்கரில் அனைத்து வசதிகளுடன் கூடிய நகரம் உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நகரத்தை அமெரிக்காவின் முக்கிய நகரங்களுடன் இணைக்க போக்குவரத்து அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும், சுரங்கப்பாதைகளும் கட்டுவதற்காக முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் பெரு நகரில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த நகரத்தில் இருக்கும் என்றும் வெளிப்புற விளையாட்டு பகுதி, நீச்சல்குளம் என சுற்றுப்புற அம்சங்களும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.