கேரளாவில் ஏற்கனவே கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இப்போது அங்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கோவிட்-19 தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், கேரளா இப்போது மற்றொரு கடுமையான சுகாதார அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.. அம்மாநிலத்தில் தற்போது ஹெபடைடிஸ் தொற்று வேகமாக பரவுகிறது.. திருச்சூர் மாவட்டம் இந்த தொற்றின் மையமாக உருவெடுத்துள்ளது. ஹெபடைடிஸ் பாதிப்பு திடீர் அதிகரிப்பு மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது. கோவிட் மற்றும் ஹெபடைடிஸின் இரட்டைச் சுமை சுகாதார அமைப்பில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, இது ஒரு பொது சுகாதார அவசரநிலை குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
தற்போது அங்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதிகாரிகள் சுகாதார ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். மாவட்ட மருத்துவ அதிகாரி, டி.எம்.ஓ டி.பி. ஸ்ரீதேவி, கவனமாக விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும்” கொதிக்க வைத்து ஆற வைத்த மற்றும் சரியாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே குடிக்க பயன்படுத்த வேண்டும். பழைய உணவைத் தவிர்க்கவும்,” என்று அவர் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்..
ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ கல்லீரலைப் பாதிக்கும் என்று அறியப்படுகிறது. மாசுபட்ட உணவு மற்றும் தண்ணீரால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மக்களுக்கு வழங்குவதற்கு முன் குடிநீரை கொதிக்க வைப்பது, குளிர்ந்த நீரை சூடான நீரில் கலக்காமல் கவனமாக இருப்பது போன்ற சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மழைக்காலம் தொடங்கியவுடன், மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சிகிச்சை பெறுவதில் எந்த தாமதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
ஹெபடைடிஸின் அறிகுறிகள் என்ன?
ஹெபடைடிஸின் அறிகுறிகள் பொதுவாக வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு முழுமையாக உருவாக 15 முதல் 60 நாட்கள் ஆகும். காய்ச்சல், உடல் வலி, சோம்பல், தலைவலி, குமட்டல், கண்கள் மஞ்சள் நிறமாக மாறுவது. சிறுநீரில் நிறம் மாறுவது ஆகியவை அறிகுறிகளில் அடங்கும்.
ஹெபடைடிஸ்: எப்படி தற்காத்துக் கொள்வது?
மக்கள் தங்கள் கைகளைக் கழுவவும், நகங்களைத் தொடர்ந்து வெட்டவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். வெளியில் சாப்பிடுவதையோ அல்லது குடிப்பதையோ தவிர்க்கவும், ஏனெனில் இது தொற்று ஏற்பட வழிவகுக்கும். ஒருவேளை உணவகங்களில் சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டால் உணவக ஊழியர்களிடம் கொதிக்க வைத்த தண்ணீரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பருவமழை நெருங்கி வருவதால், தொற்று விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கக்கூடும், எனவே இதுபோன்ற தீவிரமான நேரத்தில் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எந்தவொரு அறிகுறியும் தோன்றினாலும், ஆரம்ப நிலையிலேயே அதைத் தடுக்கவும், நிலைமையைச் சமாளிக்கவும், நோய் தொற்றின் நிலை மற்றும் அறிகுறிகளைப் பற்றி தங்களைத் தாங்களே அறிந்து கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்..
பண்டிகைகள் மற்றும் பயணங்களின் போது, உணவு மற்றும் பானங்கள் தொடர்பான விஷயத்தில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வயிற்றுப்போக்கின் அறிகுறிகள் இருந்தால் யாரும் சுய மருந்து செய்ய வேண்டாம் என்றும் உடனடியாக சுகாதார ஊழியர்களை அணுகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஹெபடைடிஸின் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமும், விழிப்புடன் இருப்பதன் மூலமும் நோய் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More : மீண்டும் அச்சுறுத்தும் கோவிட் : குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? பெற்றோர்களே இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..