அதிமுகவை ஒருங்கிணைக்க கோரி வி.கே.சசிகலா, விடுத்த தொடர் அழைப்புகளை அக்கட்சித் தலைமை கண்டு கொள்ளாத நிலையில், தற்போது தனிப்பாதையில் பயணிப்பது தொடர்பாக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். நீண்டகாலமாக அதிமுகவை மீட்கப் போராடி வந்த சசிகலா, தற்போது தனது ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு இணங்க புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில், “இனி காத்திருப்பதில் பயனில்லை, நேரடியாக களமிறங்குவதே சரி” என நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்ததால், தேர்தல் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த புதிய கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அரசியல் நகர்வின் மிக முக்கியமான திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து சசிகலா தரப்பு ரகசிய ஆலோசனைகளை நடத்தி வருகிறது. தென் மாவட்டங்களில் வலுவாக உள்ள முக்குலத்தோர் சமூக வாக்குகளை அறுவடை செய்ய சசிகலாவின் ஆதரவு தங்களுக்குப் பெரும் பலமாக இருக்கும் என விஜய் தரப்பு கணக்குப் போடுகிறது.
சசிகலாவின் இந்த அதிரடி முடிவால் அதிமுக ஒருபுறம் கலக்கமடைந்துள்ள நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அமமுக நிர்வாகிகள் சிலர் சசிகலாவை ரகசியமாக சந்தித்து வருவது தினகரனை அதிருப்தி அடைய செய்துள்ளது. சமீபத்தில் சசிகலாவை சந்தித்த அமமுக மாணவியர் அணிச் செயலாளர் ஜீவிதா நாச்சியார் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம், அத்தைக்கும் மருமகனுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதை உறுதிப்படுத்துகிறது. இதனால் அமமுகவில் உள்ள சசிகலா ஆதரவாளர்கள் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர்.



