துணிவு உள்ளிட்ட திரைப்படங்களை பார்த்து வங்கியில் பட்டப்பகலில் இளைஞர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வழக்கம் போல ஒரு பெண் உட்பட 4 ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர். அப்போது, திடீரென வங்கியில் புகுந்த வாலிபர் ஒருவர், ஊழியர்களை மிரட்டி கட்டிப் போட்டுள்ளார். பின்னர், அவர்கள் மீது மிளகாய் பொடி ஸ்பிரே அடித்து வங்கியில் கொள்ளை இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். அப்போது, ஊழியர் ஒருவர் அலறி கூச்சலிட்டதால், வங்கிக்குள் ஓடிவந்த வாடிக்கையாளர்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த வாலிபர் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த கலில் ரகுமான் (25) என தெரியவந்தது. மேலும், சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் துணிவு படத்தை பார்த்து அதேபோல வங்கியில் கொள்ளையடித்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய தொகையை கொள்ளையடித்து வாழ்க்கையில் செட்டிலாக நினைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து வாலிபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.