சின்னத்திரை உலகை அதிரவைத்த போதைப்பொருள் வழக்கில், கடந்த 10 மாதங்களாக போலீசாரை திக்கி திணற வைத்த முக்கிய ஏஜென்ட் சரவணராஜ் (55) பெங்களூருவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆர்யா நடித்த “டெடி” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த மீனா, சின்னத்திரையில் “சுந்தரி” தொடரிலும் நடித்து வருகிறார். இவர் 5 கிராம் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்ததாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகே போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தாம்பெட்டமைன் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், மீனா தனது நண்பர்களுடன் சேர்ந்து, சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வாட்ஸ்அப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரது நண்பர் ஜேம்ஸ் (29) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 19 கிராம் மெத்தாம்பெட்டமைன், 99 கிராம் மலனா கஞ்சா பேஸ்ட் மற்றும் கிரீம், 95 மில்லி கஞ்சா ஆயில், 21 கிராம் ஓஜி கஞ்சா, 12 எம்டிஎம்ஏ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த விசாரணையில், போதைப்பொருள் விற்பனையின் முக்கிய ஏஜென்ட் சரவணராஜ் என்பவர் தான் நடிகை மீனாவின் பின்னணியில் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. ஆனால், அவர் தலைமறைவாகி விட்டதால் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், சுமார் 10 மாதங்களாக பெங்களூரு ராமசாமி பாலையா பகுதியில் மறைந்து வாழ்ந்த சரவணராஜை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை வெளிநாட்டு கும்பலுக்கு பரிமாற்றம் செய்தது, மொத்தமாக போதைப்பொருளை வாங்கி, துணை நடிகை மூலம் சென்னை முழுவதும் விநியோகித்தது தெரியவந்துள்ளது. சரவணராஜிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பின்னணியில் உள்ள பெரிய கும்பலை பிடிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



