கடலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுக தற்போது பலவீனமாக உள்ளதாக அக்கட்சியினரே தெரிவித்து வருகின்றனர். ஒன்றுபட்ட அதிமுக என்ற நிலை மாறி, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த எந்த தேர்தலிலும் அதிமுக பெரும்பான்மை வெற்றி பெறவில்லை என்பதால் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பாஜக உடன் கூட்டணி வைத்ததும் கட்சிக்குள் இருக்கும் சிலருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் 2026 தேர்தல் அதிமுக ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் உறுதியாக கூறிவருகிறார். மேலும் கட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக புகார்களில் சிக்கும் முக்கிய நிர்வாகிகளை கட்சியில் இருந்து விடுவித்து வருகிறார்.
இந்த நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் கே.ஆர். செந்தில்குமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டேங்க். ஆர். சண்முகம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் இகேபி மணிகண்டன் ஆகியோரை கட்சி பதவியில் இருந்து நீக்கி உள்ளார். கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயரை உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாகவும் இவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
Read More : திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும்…! திருமாவளவன் பரபரப்பு கருத்து