அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறை தொடரலாம், ஆனால் 24-ம் தேதி வரை முடிவுகளை வெளியிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.. இந்த சூழலில் மார்ச் 26-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக தேர்தல் ஆணையர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒற்றை தலைமையை உருவாக்கி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய கோரி உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் நேற்று உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.. மேலும் இதனை அவசர வழக்காக விசாரிகக் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.. அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா இந்த வழக்கை விசாரணை எடுத்துக்கொண்டார்.. அதன்படி இன்று வழக்கு விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்பு, இடைக்கால பொதுச்செயலாளர் என யாரையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை..
தேர்தல் ஆணையம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டே கடிதம் அனுப்புகிறது.. ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்.. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கு 5 ஆண்டுகள் தலைமைக்கழக நிர்வாகிகளாக இருக்க வேண்டும் என விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் தலைமைக்கழக நிர்வாகிகளாக இல்லாத கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் எவரும் போட்டியிட முடியாது..
ஓரிரு நாட்களில் பதிலளிக்க உத்தரவிடுங்கள், அதுவரை தேர்தல் நடத்தக் கூடாது என உத்தரவிடுங்கள்.. இல்லாவிட்டால் ஒருவரே வேட்புமனு தாக்கல் செய்து, ஈபிஎஸ் -ஐ ஒருமனதாக தேர்ந்தெடுத்து விடுவார்கள்.. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு 17ம் தேதி விசாரணைக்கு வந்த போது தேர்தல் நடத்த திட்டம் என தெரிவிக்கவில்லை..” என்று வாதிடப்பட்டது..
இதனைத்தொடர்ந்து இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “ தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி தேர்தலுக்கு தடை கோர முடியாது.. உச்சநீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்த பின்னரே பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.. கட்சி தொடர்பான உரிமையான இழந்தவர்கள் 8 மாதங்கள் கழித்து தொடர்ந்துள்ளனர்..
ஜூலை 11 பொதுக்குழுவில் 2,100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தீர்மானங்கள் நிறைவேற்றம்.. அதிமுகவின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பு செயல்படுகிறது.. 1.50 கோடி அடிப்படை உறுப்பினர்களின் விருப்பப்படியே ஒற்றை தலைமை உள்ளிட்ட தீர்மானத்திற்கு குழு ஒப்புதல் அளித்துள்ளது.. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது.. ஓ.பி.எஸ். நேரடியாக வழக்கு தொடரவில்லை; வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை.. ஓபிஸ் தரப்பினர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.. அசாதாரண சூழலில் கட்சி எதிர்காலம் பற்றியே கருதுகிறோம்.. தனிநபர்களை பற்றி அல்ல” என்று வாதம் முன்வைக்கப்பட்டது..
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரே ஒரு வேட்பு மனுமட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் முடிவை நிறுத்திவைக்க பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.. அதிமுக பொது செயலாளர் தேர்தல் நடைமுறை தொடரலாம், ஆனால் 24-ம் தேதி வரை முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.. நிலுவையில் உள்ள வழக்கில் மார்ச் 22-ல் விசாரணை நடத்தப்பட்டு, மார்ச் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்.. அதுவரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்..