அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கடந்த 12-ம் தேத் மதியம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமானம் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதியதால் மருத்துவ மாணவர்கள் சிலரும் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர 241 பேரும் இறந்துவிட்டனர். மருத்துவக் கல்லூரியிலும் உயிரிழப்பு ஏற்பட்டதால் விமான விபத்தின் மொத்த பலி எண்ணிக்கை 274ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் அகமதாபாத் விமான விபத்த்ல் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மிகவும் கடினமான இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்க அயராது உழைத்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியான நிவாரண முயற்சிகளின் ஒரு பகுதியாக, துயரமடைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் மற்றும் உயிர் பிழைத்த தனிநபருக்கும் இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி நிவாரணம் அளிக்கப்படும் என்று ஏற்கனவே டாடா சன்ஸ் ஏற்கனவே உறுதியளித்த நிலையில், தற்போது இந்த இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த துயரத்தால் ஏர் இந்தியாவில் உள்ள நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். குடும்பங்கள், அன்புக்குரியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இதயங்கள் அஞ்சலி செலுத்துகின்றன. நாங்கள் அவர்களின் துயரத்தில் பங்கு கொள்கிறோம், சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர்களுடன் நிற்கிறோம்,” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் கேம்பல் வில்சன் தனது வீடியோ செய்தியில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.
இதனிடையே அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் காயமடைந்த மற்றும் இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குமாறு இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) டாடா சன்ஸ் நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனுக்கு இந்திய மருத்துவ சங்கம் எழுதிய கடிதத்தில், “காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்கள் அனுபவித்த வலி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது” என்று டாடா குழுமம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரக்கமுள்ள கரம் நீட்ட வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதே நிதி உதவியை, இறந்தவருக்கு ரூ.1 கோடி வழங்குமாறு இந்திய மருத்துவ சங்கம் கோரியது. விபத்தில் உயிரிழந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தனிப்பட்ட முறையில் நிவாரணம் வழங்க வேண்டும். இதுபோன்ற ஒரு செயல் உண்மையான ஒற்றுமையை பிரதிபலிக்கும் மற்றும் இந்த துக்க நேரத்தில் மருத்துவ சகோதரத்துவத்திற்கு மிகவும் தேவையான உறுதிப்பாட்டை வழங்கும்” என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.