ஏர் இந்தியா விமான விபத்து ஏற்பட்ட ஜூன் 12 அன்று சரியாக என்ன நடந்தது ? என்பது குறித்து மத்திய அரசு முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளது.
ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் சுமார் 260 பேர் கொல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முதன்முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தது. விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்தில் மேகனிநகரில் உள்ள மருத்துவ விடுதி வளாகத்தில் மோதியதாக சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர் சமீர் குமார் சின்ஹா தெரிவித்தார்.
மேலும் “ 650 அடி உயரத்தை அடைந்த பிறகு, விமானம் உயரத்தை இழக்கத் தொடங்கியது. விமானி பிற்பகல் 1:39 மணிக்கு (ஜூன் 12) விமான கட்டுப்பாட்டு அறைக்கு Mayday அழைப்பு விடுத்தார். விமானத்தைத் தொடர்பு கொள்ள முயன்றபோது எந்த பதிலும் இல்லை. சரியாக ஒரு நிமிடம் கழித்து, விமான நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மேகனி நகரில் விமானம் விபத்துக்குள்ளானது.” என்று கூறினார். வியாழக்கிழமை விபத்து நடைபெறுவதற்கு முன்னர், ஏர் இந்தியா விமானம் பாரிஸ்-டெல்லி வரை விமானம் எந்த பிரச்சனையும் இல்லாமல் பறந்து என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, கடந்த இரண்டு நாட்கள் மிகவும் கடினமாக இருந்ததாகக் கூறினார். மேலும் “அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே நடந்த விபத்து முழு நாட்டையும் உலுக்கியது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாலை விபத்தில் எனது தந்தையையும் இழந்துவிட்டேன். எனவே, ஓரளவுக்கு, குடும்ப உறுப்பினர்கள் உணரும் வலியையும் வேதனையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ”என்று அவர் கூறினார்.
மேலும் “ சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் வழிகாட்டுதலின்படி ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானக் குழுவில் கண்காணிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 34 ட்ரீம்லைனர்களில், எட்டு விமானங்கள் ஏற்கனவே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன,” என்று கூறினார்.
ஏர் இந்தியா விமான விபத்து
ஜூன் 12 அன்று சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் (AI 171) விமானம், சில நிமிடங்களிலேயே மேகனிநகரில் உள்ள ஒரு மருத்துவ விடுதி வளாகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் ஒருவர் உயிர் தப்பினார். விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக மத்திய அரசு உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்துள்ளது. இந்த குழு 3 மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : விமான விபத்து.. விசாரணை முடிந்தால் தான் உண்மையான காரணம் தெரியவரும்.. மத்திய அமைச்சர்..