செயல்பாட்டு நிலைத்தன்மை மற்றும் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பெரிய அளவிலான விமானங்களின் சேவையை 15% குறைப்பதாக ஏர் இந்தியா விமானம் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறந்த செயல்திறனை உறுதி செய்வதற்கும், விமான நம்பகத்தன்மையைப் பேணுவதற்கும், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைக்கப்பட்ட அட்டவணை ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வரும், மேலும் குறைந்தபட்சம் ஜூலை நடுப்பகுதி வரை நடைமுறையில் இருக்கும் என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது? ஜூன் 12 அன்று நடந்த ஏர் இந்தியா விமானம் விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல், ஐரோப்பியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் இரவு நேரத்தில் வான்வழி பயன்பாட்டிற்கு தடை விதிப்பு மற்றும் விமான போக்குவரத்துத்துறையின் ஆய்வு போன்றவற்றின் காரணமாக கடந்த 6 நாட்களில் 83 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
இந்த சவாலான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஜூலை இரண்டாவது வாரம் வரை சர்வதேச நாடுகளுக்கு இயக்கப்படும் பெரிய விமானங்களின் சேவைகளை 15 விழுக்காடு குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் மாற்று விமானத்தில் செல்ல உதவி செய்யப்படும் என்று ஏர் இந்தியா உறுதியளித்துள்ளது.
ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்காலிக சேவைக் குறைப்பால் பாதிக்கப்படும் பயணிகளுக்காக முன்கூட்டியே தகவல் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதியும், நலனும், நிறுவனத்தின் முதன்மை முன்னுரிமையாக இருக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாற்று விமானங்களைத் தேர்ந்தெடுப்பது, இலவச மறு அட்டவணைப்படுத்தல் அல்லது எந்த அபராதமும் இல்லாமல் முழுப் பணத்தையும் திரும்பப் பெறுதல் ஆகியவற்றை வழங்கியுள்ளது. இந்த சரிசெய்தல் காலத்தில் பயணிகளின் வசதியும் திருப்தியும் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்று விமான நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
AI171 சம்பவத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ள ஏர் இந்தியா, இது குறித்து முறையான விசாரணை நடைபெற்று வருவதாகக் தெரிவித்துள்ளது. காரணங்களைக் கண்டறியவும் அதன் பாதுகாப்பு நெறிமுறைகளை மேலும் மேம்படுத்தவும் விமான நிறுவனம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.
Read more: சென்னை மக்களை..! இன்று புறநகர் மின்சார ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!! – எந்தெந்த பகுதிகள் தெரியுமா..?