உயரமான பகுதியில் ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பின் உயரமான பகுதிகளில் இலக்குகளை தாக்கும் பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. லடாக்கில் நேற்று முன்தினம் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை 4,500 மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்த முடியும். இது 25 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது.
ராணுவ வான் பாதுகாப்பு அமைப்பும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வும் இணைந்து பாரத் டைனமிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இதனை உருவாக்கியுள்ளன. நாட்டின் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்களில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.
இந்த சாதனைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். டிஆர்டிஓ, ராணுவம் மற்றும் பொதுத்துறை பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த வெற்றி இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் திறன்களை மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.