திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பி.மேட்டூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அதே பகுதியைச் சேர்ந்த சாரதா என்ற உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே, உப்பிலியபுரம் அருகேயுள்ள உள்ள ஷோபனாபுரத்தில் விஜயசேகரன் என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து ராஜ்குமார் விவசாயம் செய்து வந்தார். வயலின் நடுவே உள்ள வீட்டில் ராஜ்குமார் – சாரதா தம்பதி வசித்து வந்தனர். கடந்த 3ஆம் தேதியன்று தம்பதியினர் வீட்டு வாசலில் இருவரும் உறங்கியுள்ளனர். அதிகாலையில் அங்கு வந்த மர்ம நபர்கள், கணவன்-மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்தனர்.
பின்னர், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணையை தீவிரப்படுத்தினர். தம்பதியைக் கொலை செய்தது யார்? எதற்காகக் கொலை செய்தார்கள் என்ற கேள்விகளுக்கு, விடை தெரியாமல் மர்மமாகவே இருந்தது. இதற்கிடையே, தம்பதி வசித்து வந்த வீட்டின் கதவில், ‘ஐ’ என்ற ஆங்கில எழுத்து ரத்தத்தில் எழுதப்பட்டிருப்பது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியை கொலை செய்துவிட்டு அவர்களின் ரத்தத்தில் ’ஐ’ குறியீட்டை எழுதிச் சென்றார்களா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஆழமாக எழுந்துள்ளது.
கொலை வழக்கில் முக்கிய அடையாளமாக, இந்த ’ஐ’ குறியீட்டைக் கருதி, போலீசார் தடயவியல் வல்லுநர்களின் உதவியுடன் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கொலை செய்துவிட்டு, இதே பாணியில் அடையாளக் குறியீடும் கொலையாளிகள் குறித்த விவரங்களை, போலீசார் திரட்டி வருகின்றனர். ‘ஐ’ என்ற ஒற்றை தமிழ்ச் சொல், ஆச்சரியம், ஐந்து, ஐயம் உள்ளிட்ட அர்த்தங்களைக் குறிக்கும். நிஜத்தில் சீரியல் கில்லர்களும், சைக்கோ கொலையாளிகளும், கொலைக்கு அடையாளமாக சில குறியீடுகளை விட்டு செல்வது வழக்கம். அதே பாணியில் தற்போது ராஜ்குமார்-சாரதா தம்பதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. உண்மையான குற்றவாளிகள் சிக்கினால் மட்டுமே இரட்டை கொலைக்கும், இந்த ’ஐ’ குடியீட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.