மின்சார உற்பத்தியும் அதன் உபயோகத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது பல்வேறு வேறுபாடுகள் வருகிறது. அதாவது மின் திருட்டு, மீட்டரில் ஏற்படும் பழுதால் மின்கணக்கீட்டில் பாதிப்பது, தொழில்நுட்ப இணைப்புகள் போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக ஸ்மார்ட் மீட்டர் வருகிறது. சிம் பொருத்தப்பட்ட மீட்டர் மூலம் ஒவ்வொரு நுகர்வோரின் மின்சார உபயோகம் குறித்து அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படுகிறது. மீட்டரில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் நுகர்வோரின் ஸ்டேட்டஸ் பதிவு செய்யப்படுகிறது.
இதனால், நுகர்வோர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் பதிவுகள் மூலம் தகவல்கள் எடுக்கலாம். இந்த வசதி பழைய மீட்டரில் இல்லை. தற்போது இந்த ஸ்மார்ட் மீட்டரை மின்வாரியமே பொருத்துகிறது. மேலும், தனிப்பட்ட நுகர்வோர் அல்லது ஒட்டுமொத்த நுகர்வோரின் தகவல்கள் கொண்டு பயன்பாட்டை கணக்கிட்டுக் கொள்ளலாம். மின்சாரத்தை துண்டிக்கவும் நேரடியாக வீட்டிற்கு ஊழியர்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அதேபோல் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் பட்டியலை கொண்டு மின் இணைப்பை துண்டிப்பதற்கான அறிவிப்பை கொடுத்தால் தானாகவே செய்துவிடும். தற்போது போஸ்ட் பெய்டு திட்டம் கொண்டுவரப்படும். அதன் பின்பு ப்ரீபெய்டு திட்டம் நடைமுறைக்கு வரும். நுகர்வோருக்கு அவர்கள் உபயோகித்த மின் அளவு கட்டணம் செலுத்த இறுதி நாள் போன்றவை குறுஞ்செய்தியாக வரும். மதுரை மின்சார வாரியத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பொறியாளர்களுக்கும் இதன் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.