அமெரிக்கா – கைலாசா இடையே இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர். பிறகு இவர், பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தார். இந்நிலையில், நித்தியானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், சர்ச்சைக்குரிய வீடியோவும் வெளியாகி நித்யானந்தாவை சர்ச்சை வலையில் சிக்க வைத்தது. இதனையடுத்து, நித்தியானந்தா பாலியல் கொடுமை வழக்குகள் மற்றும் குஜராத் ஆசிரம வழக்குகளால் நெருக்கடி அதிகரித்ததால் வேறுவழியின்றி நித்தியானந்தா தலைமறைவானார். இதையடுத்து கைலாசா எனும் புதிய நாட்டை வாங்கி விட்டதாகவும் கைலாசா இந்துக்களின் புனித பூமியாக இருக்கும் என கூறி திடீர் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை பலரும் நம்பவில்லை. கைலாசா எங்கு இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், கைலாசாவை அமெரிக்கா அங்கீகரித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நித்யானந்தா தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் நகர மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் மரபுபடி அந்நாட்டுடன் வேறு ஒரு நாடு ஒப்பந்தம் மேற்கொள்கிறது எனில் அந்நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்படும். அந்த வகையில் நெவார்க் நகர மண்டபத்தில் கைலாசாவின் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.