தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி இன்று காலமானார். அவருக்கு வயது 85.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளார் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி.. கடந்த சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதாவுக்கும் சுதீஷுக்கும் இந்த தகவல் தெரியவந்ததும் அவர்கள் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு திரும்பி வருகிறார்கள். பிரேமலதா விஜயகாந்த் கண்ணீருடன் வெளியே வரும் காட்சிகள் வெளியானது.
அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தே.மு.தி.க பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க.வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.



