2005ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட இந்து வாரிசுச் சட்டத்தின் படி, மகள்களுக்கும் தந்தையின் சொத்தில் மகன்களைப் போலவே சமமான பங்கு உண்டு. ஆனால், தந்தை தன் உழைப்பால் சம்பாதித்த சொத்துக்கு, அவர் விரும்பியவருக்கு மட்டுமே அதை வழங்கும் உரிமை உண்டு; அதில் மகளுக்கு தானாக உரிமை கிடையாது.
இந்நிலையில், கேரளாவில் 27 வயது திருமணமாகாத மகள் ஒருவர், தன் 65 வயது தந்தையிடம் மாதாந்திர பராமரிப்பு தொகை கேட்டு குடும்ப நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றம், மகளுக்கு ரூ.10,000 மற்றும் தாய்க்கு ரூ.20,000 வழங்க உத்தரவிட்டது.
அதற்கு எதிராக தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் கூறியதாவது: “என் மகள் வயது வந்தவர். கிறிஸ்தவ சட்டத்தின் படி அவளுக்கு பராமரிப்பு கேட்க உரிமை இல்லை. எனவே குடும்ப நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் கௌசர் எடப்பகத் தலைமையிலான அமர்வு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதாவது, “ஹிந்து சட்டம் மற்றும் இஸ்லாமிய சட்டத்தின் படி தந்தைக்கு திருமணம் ஆகாத மகளுக்கு பராமரிப்பு வழங்க கடமை உண்டு. ஆனால் கிறிஸ்தவ தனிச்சட்டங்களில் அத்தகைய விதி இல்லை. எனவே, கிறிஸ்தவ மகள் தந்தையிடம் பராமரிப்பு கேட்க முடியாது.” என்றார்.
இதனால், மகளுக்கான பராமரிப்பு உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதேசமயம், மனைவிக்கு மாதம் ரூ.20,000 பராமரிப்பு தொகை மற்றும் ரூ.30,000 கல்விச்செலவு வழங்கும் குடும்ப நீதிமன்ற உத்தரவை ஹைகோர்ட் உறுதிசெய்தது. இந்த தீர்ப்பு, மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்களின் வித்தியாசங்களையும், திருமணமாகாத மகள்களின் உரிமை மீதான புதிய விவாதங்களையும் மீண்டும் முன்வைத்து இருக்கிறது.
Read more: இந்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் விஷமாகும்.. கவனமாக இருங்கள்!



