பாமகவுக்கு யார் தலைவர் என்பதில் தந்தை மகன் இடையே மோதல் நீடிக்கும் நிலையில், அவசர பயணமாக டெல்லி சென்றுள்ள அன்புமணி தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று சந்திக்க உள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடுமையான அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் வெட்ட வெளிச்சமானது. அன்புமணிக்கு ஆதரவான நிர்வாகிகளை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வரும் ராமதாஸ், அந்த பொறுப்புகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார்.
தைலாபுரத்தில் ராமதாஸ் தொடர்ந்து கட்சிக் கூட்டங்களை நடத்தினாலும், அதில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்காத நிலையில், அன்புமணி நடத்தும் கூட்டங்களில் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் சந்தித்து பேசி இருந்தார்.
தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளர்கள் யார் என்பதை தான்தான் முடிவு செய்வேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளதால், தேர்தல் நேரத்தில் பாமகவில் சிக்கல் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது. இதனால், கட்சியில் உண்மையான அதிகாரம் ராமதாஸுக்கா… அன்புமணிக்கா… என்ற குழப்பம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்த நிலையில், நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்ற மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவின் தலைவராக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்ற அடிப்படையில் தனக்கே கட்சியின் அனைத்து அதிகாரமும் உள்ளதாகவும், கட்சியின் சின்னத்தை தனக்கே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவும் அன்புமணி ராமதாஸ் தரப்பிலிருந்து நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும், நேரம் உறுதியானதும் அமித்ஷாவையும் சந்தித்து பாமகவில் நிலவி வரும் உட்கட்சி விவகாரம் மற்றும் கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Read more: அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழனுக்கு முக்கிய பதவி..!! – EPS அறிவிப்பு