தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் வெவ்வேறு வகையில் காய்களை நகர்த்தி வருகிறார். கடந்த சில நாட்களாக பாஜகவில் இருந்த பல நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து கொண்டனர். இது அண்ணாமலைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்சியில் இருந்து விலகியவர்கள் அண்ணாமலையை கடுமையாக குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக மாநில மற்றும் அணி பிரிவின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அண்ணாமலை, கூட்டணி நிலைப்பாடு குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ”திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்பவில்லை. யாருக்கும் சலாம் அடித்து இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு பேசவேண்டிய அவசியம் இல்லை. எனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். இது தொடர்பாக விரைவில் முடிவை அறிவிப்பேன்” என பேசினார்.
ஆனால், அடுத்த சில நாட்களுக்குள் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, கூட்டணி தொடர்பான முடிவினை தேசிய தலைமை தான் அறிவிக்கும். தேசிய தலைமையிடம் எனது கருத்தை தெரிவிப்பேன். எந்த கட்சியினையும் நான் குறை செல்லவில்லை என்றும் தெரிவித்திருந்தார். முன்கூட்டியே பாஜக மாநில நிர்வாகிகள் ஒரு சிலர் அண்ணாமலைக்கு எதிராக புகார்களை தேசிய தலைமைக்கு ரகசியமாக தட்டிவிட்டுள்ளனர். இருந்தபோதிலும் அண்ணாமலை தமிழக அரசியல் நிலவரம், பாஜக வளர்ச்சி குறித்து பேச வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் நேரம் கேட்டிருந்த நிலையில் திடீர் பயணமாக இன்று காலை அண்ணாமலை டெல்லி சென்று அங்கு மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டாவினை சந்திக்க உள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் டெல்லி செல்ல உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.