தமிழக அரசியல் களத்தில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” மீண்டும் ஒரு பிளவை சந்திக்க தயாராகி வருகிறது. அந்த அணியின் மூத்த அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், தற்போது ஓபிஎஸ் அணியிலிருந்து முற்றிலுமாக விலகி, “எம்ஜிஆர் அதிமுக” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஏற்கனவே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் போன்ற முக்கிய முகங்கள் ஓபிஎஸ் அணியை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்த வெளியேற்றம் அந்த அணியை கிட்டத்தட்ட ஒரு பலவீனமான நிலைக்கு தள்ளியுள்ளது. தனது புதிய கட்சியின் கொள்கைகள், பெயர் அறிவிப்பு மற்றும் வெளியேற்றத்திற்கான காரணங்கள் குறித்து விரிவாக விளக்குவதற்காக, வரும் பிப்ரவரி 19-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் அவர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் மற்றொரு சுவாரசியமான திருப்பமாக, பண்ருட்டி ராமச்சந்திரன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மூத்த தலைவர், வளர்ந்து வரும் ஒரு புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்தால், அது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாற்று சக்தியாக உருவெடுக்க கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த திடீர் அரசியல் நகர்வுகள் ஓபிஎஸ் அணியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 19-ம் தேதி நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பு தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள்..? ஆய்வு முடிவில் வெளியான சூப்பர் தகவல்..!!



