தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமென்றும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் நேற்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 25 வயது இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 60 வயது முதியவர் உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் தொற்று இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், சேலத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா மற்றும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் தான், சென்னையிலும் நேற்று 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 189 பேர் சிகிச்சையில் உள்ளனர். 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், இதனால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருவதால், இதனை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா..? என்று மக்கள் அச்சப்படுகின்றனர். ஆனால், அதேபோன்ற ஒரு முடிவு தற்போது வரை அரசு எடுக்கவில்லை என்றே தெரிகிறது.