தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தவெக அரசை கடுமையாக விமர்சித்தார்.
தஞ்சையில் விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தான் நடத்திய போராட்டத்தின்போது டம்மி முதல்வர் என விமர்சித்ததற்கு அமைதி காத்த அரசு, காவிரி விவகாரத்தில் தண்ணீர் வரவில்லை எனக் கூறியதும் கோபமடைந்து தன்னைக் கைது செய்ததாக உதயநிதி தெரிவித்தார். பின்னர் வழக்கில் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியதோடு, ‘உதயநிதியை கைது செய்யவில்லை; விசாரித்து அனுப்புகிறோம்’ என அரசு பின்வாங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய ஆட்சியில் விவசாயிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கவும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யவும் அரசிடம் போதிய நிதி இல்லை என்று கூறும் முதலமைச்சர் விஜய், சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார்களை வாங்க மட்டும் எவ்வாறு நிதி ஒதுக்குகிறார் என கேள்வி எழுப்பினார். ‘திமுக எம்எல்ஏக்களுக்கு அரசு கார் தேவையில்லை; அந்த நிதியைக்கொண்டு விவசாயிகளின் துயரத்தை தீருங்கள்’ எனத் தாங்கள் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டதாக அவர் கூறினார்.
மேலும், சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து பேசிய உதயநிதி, மக்கள் நலன், விவசாயிகள் பிரச்சனை மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்தவொரு கேள்விக்கும் முதலமைச்சர் நேரடி விளக்கம் அளிப்பதில்லை என்றும், மாறாக உறுப்பினர்கள் பதிலளிக்காமல் பாட்டுப் பாடிக் கொண்டிருப்பதாகவும் சாடினார். அவையில் மூன்று அமைச்சர்கள் மட்டுமே பதிலளித்து வரும் சூழலில், அவர்களும் சரியான விளக்கம் தராமல் விவாதங்களை திசைதிருப்புவதாகவும், அமைச்சர்களும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் தினமும் நான்கு ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் எடுப்பதற்காகவே சட்டசபைக்கு வருகை தருவதாகவும் விமர்சித்தார். கடந்த திமுக ஆட்சியில் 11.19 சதவீதப் பொருளாதார வளர்ச்சியுடன் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிய தமிழகத்தை, தற்போது பாதாளத்திற்குத் தள்ளி வளர்ச்சியைப் பின்னோக்கி இழுக்கும் ஒரு டம்மி அரசாக தவெக அரசு செயல்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
Read More : வைரலாகும் வீடியோ..!! அதில் இருப்பது நானா? அமைச்சர் கீர்த்தனா கொடுத்த பரபரப்பு விளக்கம்..!!


