2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பிறகு ஸ்பானிஷ் வீரர்களுடன் களத்தில் மோதலில் ஈடுபட்டதற்காக, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர மிட்பீல்டர் லியாண்ட்ரோ பரேடெஸுக்கு உலக கால்பந்து அமைப்பான பிஃபா 10 போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது. மேலும், அவருக்கு 90,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ஆத்திரத்தில் ஸ்பெயின் வீரர்களுடன் பரேடஸ் கைகலப்பில் ஈடுபட்டதே இந்தக் கடுமையான நடவடிக்கைக்குக் காரணமாகும்.
இந்தச் சம்பவத்தில் பரேடஸ் மட்டுமின்றி, சக வீரரான நாகுவல் மொலினாவும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளார். ஸ்பெயின் வீரர் ரோட்ரியை வயிறு பகுதியில் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொலினாவுக்கு 7 போட்டிகள் தடையும், 90,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர, அணியின் ஸ்டாஃப் உறுப்பினர் ராபர்டோ அயலாவுக்கு 3 போட்டிகள் தடையும், தியாகோ அல்மாடாவுக்கு 1 போட்டி தடையும் விதிக்கப்பட்டு, அவற்றுடன் தலா 30,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வீரர்களின் ஒழுங்கீனம் மற்றும் அரையிறுதிப் போட்டியின் போது ரசிகர்கள் அரசியல் முழக்கங்களை எழுப்பிய விதிகளின் மீறல் ஆகியவற்றுக்காக அர்ஜென்டினா கால்பந்து சங்கத்திற்கு (AFA) 321,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைகள் மற்றும் அபராதங்கள் அனைத்தும் அர்ஜென்டினா அணியின் வரவிருக்கும் சர்வதேசப் போட்டிகளில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பிஃபா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.



