காசா மீதான இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெறும் வான்வழித் தாக்குதலும் துப்பாக்கிச் சூடும் உயிரிழப்புகளை தினசரி பெருக்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா முழுவதும் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர், உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுக்குப்பிறகு, 2024 ஜனவரியில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், இரு தரப்பும் தங்களிடம் உள்ள பணய கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டிருந்தனர்.
முதல் கட்டம் நிறைவுபெற்ற நிலையில், ஹமாஸ் 2வது கட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வந்தது. அதன்படி, காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், இஸ்ரேல் தனது தரப்பில் உள்ள மேலும் சில பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்தியது. இருபக்கமும் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக இருந்ததால், ஒப்பந்தம் சிக்கலில் சிக்கியது.
இந்நிலையில், மார்ச் 18ஆம் தேதி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியது. தற்போது, காசாவின் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்ததுப்படி, இந்த தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காசாவின் மக்சி அகதிகள் முகாம், ஜெய்டவுன் மற்றும் காசா நகரத்தின் வீடுகள் மீது நடந்த குண்டுவீச்சுகளில் 21 பேர் உயிரிழந்தனர். கான் யூனிஸின் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர். சலாஹுதீன் சாலையில் உதவித் தொகுப்புகள் தரும் ஐ.நா லாரிகளுக்காகக் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மட்டும் 14 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மே மாத இறுதியில் மீண்டும் உணவு உதவி விநியோகம் தொடங்கியதிலிருந்து இதுவரை 397 பேர் உணவுக்காக வந்து கொல்லப்பட்டுள்ளனர். “இஸ்ரேலிய குண்டுகளால் இறக்காதவர்கள் பசியால் இறக்கின்றனர். மக்கள் உணவுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்” என காசா நகரத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
Read more: விமான விபத்து எதிரொலி!. புதிய விதிகள் அமல்!. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதிரடி!