தற்போதுள்ள காலகட்டத்தில் நாட்டில் ஆண் மற்றும் பெண் பாலின சமநிலை சரிவு ஏற்பட்டு வருகின்றது. ஒரு சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஆண்களுக்கு சரியான வயதில் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஆகிறது. மேலும், சில மாநிலங்களில் பெண்களை திருமணம் செய்ய வேண்டுமென்றால் அதிகளவு வரதட்சணை கொடுக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், பீகார் மணமகன்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்படுகின்றன.

மராட்டிய மாநிலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் அனைவரும் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களுடன் இணைந்து சோலாப்பூரில் திருமணமாகாத ஆண்கள் பேரணி நடத்தி வருகின்றனர். மேலும், இந்த போராட்டத்தில் அதிகமான ஆண்கள் மணமகன்கள் போல ஆடையணிந்து கலந்து கொண்டனர். அதிலும் ஒரு சிலர் ஒரு படி மேல சென்று மணமகன் போல அலங்காரம் செய்து கொண்டு பேண்ட் வாத்தியங்கள் முழங்க குதிரையில் ஊர்வலமாக வந்தனர். மேலும், அவர்கள் எங்களுக்கு திருமணத்திற்கு அரசு தான் பெண் தேடி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் தாயின் கருவின் பாலினத்தை கண்டறிபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். இந்த பேரணியை பலரும் கிண்டல் செய்யலாம். ஆனால் ஆண் பெண் விகிதாச்சாரம் மாறுபட்டு இருப்பதினால் தான் திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பதில்லை என்பது உண்மை என கூறினார்கள். மராட்டிய மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் தான் இருக்கின்றனர். இதற்கு காரணம் பெண் சிசுவதையைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது என குற்றம் சாட்டியுள்ளனர்.