தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்த பட்டியலை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 13ம் தேதி திங்கட்கிழமை 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்க உள்ளன. மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்வு அறையில் மாணவர்கள் தவறு செய்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதில், மாணவர்கள் காப்பி அடித்தால் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும். தேர்வறையில் துண்டு தாள்களை தன் வசம் வைத்திருந்தால் அந்த மாணவர் பருவத்தில் எழுதிய அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதுடன் ஓராண்டு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆள் மாறாட்ட நடவடிக்கை செய்தால் பொது தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும். மேலும் பருவத்தில் எழுதிய தேர்வுகள் ரத்து செய்யப்படும். விடைத்தாள்களில் விடைகளைத் தவிர்த்து வேறு விஷயங்களை எழுதினால் குறிப்பிட்ட அந்த மாணவர் எழுதிய பாடத் தேர்வு ரத்து செய்யப்படும். விடைத்தாள்களை தேர்வு அறையில் இருந்து வெளியே அனுப்பினால் மூன்றாண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என 15 வகை முறைகேடுகளை குறிப்பிட்டு அதற்குரிய தண்டனை விவரங்களை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.