உலகளவில் பறவைக் காய்ச்சல் தொற்று வேகமாக பரவிவருவதால், அனைத்து நாடுகளும் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் பறவைக்காய்ச்சல் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக H5N1 வகையை சேர்ந்த பறவைக்காய்ச்சலால் ஆங்காங்கே உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகின்றன. அதன்படி, கடந்த மாதம் ஈக்வடாரை சேர்ந்த சிறுமிக்கு H5N1 வகை தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து சிறுமிக்கு இருமல், தொண்டை கரகரப்பு, போன்ற அறிகுறிகள் மற்றும் 39 டிகிரி செல்சியஸ் காய்ச்சல் பதிவாகி இருந்தது. இந்தநிலையில், கம்போடியா நாட்டை சேர்ந்த 11 வயது சிறுமி இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழ்ந்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வகை தொற்று உயிரிழந்த சிறுமியின் தந்தைக்கும் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறிகுறிகள் தென்படவில்லை என்று கூறியுள்ளது.
இந்த H5N1 வகை தொற்றால் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், உலகளவில் தொற்று வேகமாக பரவி வருவதாகவும் கவலை தெரிவித்திருக்கிறது. குறிப்பாக இந்த வகை தொற்று குறித்து அனைத்து நாடுகளும் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு மிகவும் அரிதாக பரவும் பறவைக்காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் பறவைக்காய்ச்சல் உலகளவில் பரவிவருவதால் மனிதர்கள் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருத்தல் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.