பொங்கல் விடுமுறை மற்றும் குடியரசு தின விடுமுறை நாட்களில் வங்கிகள் இயங்காது என்ற நிலையில், தற்போது ஜனவரி 28ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வங்கி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். ஆனால், இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுவதாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்தன. இந்நிலையில், வாரத்தில் 5 நாட்கள் பணி, ஓய்வூதியம் புதுப்பித்தல், தேசிய ஓய்வூதிய முறையை ரத்து செய்தல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை என்பதால் மீண்டும் வேலைநிறுத்த அறிவிப்பை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஜனவரி 28ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை விடுமுறை என்பதும் ஜனவரி 29 ஞாயிறு விடுமுறை என்ற நிலையில் ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வங்கிகளுக்கு நேரடியாக செல்லும் வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்படைவார்கள்.