இந்தியப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கிலும், சுயதொழில் தொடங்கும் பெண்களின் கனவுகளை நனவாக்கவும் ‘பாங்க் ஆஃப் பரோடா’ வங்கி ஒரு சிறப்பான கடன் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ‘தேனா சக்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், சில்லறை வர்த்தகம், விவசாயம் மற்றும் சிறு நிறுவனங்கள் நடத்தும் பெண் தொழில்முனைவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மிக முக்கிய அம்சமே இதில் வழங்கப்படும் வட்டிச் சலுகைதான். சந்தை வட்டி விகிதத்திலிருந்து பெண் தொழில்முனைவோருக்கு தனிச்சிறப்பாக 0.25 சதவீதம் வரை வட்டி குறைப்பு செய்யப்படுகிறது. இது சிறு தொழில் செய்யும் பெண்களுக்குத் தங்களது மாதாந்திர தவணைகளைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்கப் பெரிதும் உதவும். உற்பத்தித் துறை, கல்வி மற்றும் சேவைத் துறைகளில் ஈடுபடும் பெண்களும் இந்தச் சலுகையைப் பெற்றுப் பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் கவனிக்க வேண்டிய சில முக்கிய நிபந்தனைகள் உள்ளன. விண்ணப்பிக்கும் பெண்மணி, சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும் அல்லது அந்த தொழிலில் குறைந்தது 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது, நிர்வாக முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெண்ணிடம் இருப்பதை வங்கி உறுதி செய்யும். உங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்தால், உடனடியாக அருகிலுள்ள ‘பாங்க் ஆஃப் பரோடா’ கிளைக்குச் சென்று கூடுதல் விவரங்களைப் பெறலாம்.



