அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பெர்முடா தீவு, பல ஆண்டுகளாக உலக புவியியலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்திய ஒரு பெரிய புதிராக இருந்து வந்தது. சுற்றியுள்ள கடலடித் தளத்தை விட சுமார் 1,600 அடி உயரத்தில் இந்த தீவு இன்னும் நிலைத்திருப்பதற்கான காரணம் என்ன என்பது பல தசாப்தங்களாக விளங்காத மர்மமாக இருந்தது. தற்போது அந்த கேள்விக்கு பதில் கிடைத்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கார்னகி அறிவியல் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, வில்லியம் ஃப்ரேசர் மற்றும் ஜெஃப்ரி பார்க் தலைமையிலான ஆய்வுக் குழு, பெர்முடா தீவின் அடிப்பகுதியில் உலகின் பிற பகுதிகளில் காணப்படாத தனித்துவமான புவியியல் அமைப்பு இருப்பதை கண்டறிந்துள்ளது.
பொதுவாக ஹவாய் போன்ற எரிமலைத் தீவுகள் “மேன்டில் ப்ளூம்” எனப்படும் பூமியின் ஆழத்திலிருந்து மேலே எழும் சூடான பாறைத் தூண்களின் காரணமாக உருவாகின்றன. இந்த சூடான பாறைகள் மேல்நோக்கி தள்ளப்படும்போது கடலடித் தளம் உயர்ந்து, அதன் மூலம் தீவுகள் உருவாகின்றன. பின்னர் புவித்தட்டுகள் நகர்வதால் அந்த ப்ளூமிலிருந்து தீவுகள் விலகி, எரிமலைச் செயல்பாடு குறைந்ததும் அவை மெதுவாக கீழிறங்குவது இயல்பான செயல்முறையாக கருதப்படுகிறது.
ஆனால் பெர்முடாவில் இந்த இயல்பு நடைபெறவில்லை. அங்குள்ள எரிமலைகள் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே செயலிழந்துவிட்ட போதிலும், அந்த தீவு இன்னும் கடலடித் தளத்தை விட உயரமாகவே உள்ளது. இதுவே விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய முக்கிய காரணமாகும்.
இந்த மர்மத்தை கண்டறிய விஞ்ஞானிகள் ஒரு புதுமையான ஆய்வு முறையை பயன்படுத்தினர். உலகின் பல பகுதிகளில் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உருவாகும் நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்து, அவை பூமிக்குள் பயணிக்கும் வேக மாற்றங்களை கண்காணித்தனர். இந்த அலைகள் எந்த வகையான பாறைகளின் வழியாக செல்கின்றன என்பதைப் பொறுத்து அவற்றின் வேகம் மாறுவதால், பூமியின் உட்புற அமைப்பை வரைபடமாக உருவாக்க முடிகிறது.
பெர்முடாவில் அமைந்துள்ள நில அதிர்வு நிலையங்களில் பதிவான தரவுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், தீவின் அடியில் சுமார் 20 மைல்கள் ஆழம் வரை உள்ள அமைப்புகளை ஆராய்ந்தனர். அப்போது அவர்கள் எதிர்பாராத ஒரு உண்மையை கண்டுபிடித்தனர்.
கடலடித் தளத்தின் கீழே 12 மைல்களுக்கு மேல் தடிமனான ஒரு இலகுவான பாறை அடுக்கு இருப்பது தெரியவந்தது. இந்தப் பாறை, சுற்றியுள்ள கவசப் பாறைகளை விட அடர்த்தி குறைவாக இருப்பதால், அது ஒரு பெரிய தெப்பம் போல செயல்பட்டு கடலடியையும் பெர்முடா தீவையும் “மிதக்க” வைக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
“அண்டர்பிளேட்டிங்” எனப்படும் இந்த அடுக்கு, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கார்பன் நிறைந்த உருகிய பாறைகள் பூமியின் அடிப்பகுதிக்குள் புகுந்து அங்கேயே குளிர்ந்ததால் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் பொருட்கள் பாங்கேயா என்ற மிகப்பெரிய கண்டம் உருவான காலத்திலேயே பூமியின் ஆழத்தில் தோன்றியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு குறித்து கருத்து தெரிவித்த வில்லியம் ஃபிரேசர், “பெர்முடாவின் புவியியல் அமைப்புகள் பாரம்பரிய மேன்டில் ப்ளூம் கோட்பாட்டுடன் பொருந்தவில்லை. இங்கு கண்டறியப்பட்ட தடிமனான அண்டர்பிளேட்டிங் அமைப்பு, பூமியின் மேன்டிலில் இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படாத பல வெப்பச்சலன செயல்முறைகள் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது” என்று கூறினார்.
இந்த ஆய்வு, பூமியின் ஆழப் பகுதிகளில் நடைபெறும் புவியியல் மாற்றங்கள் குறித்த புரிதலை மாற்றக்கூடிய முக்கியமான கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது. தற்போது உலகின் பிற தீவுகளின் அடியிலும் இதே போன்ற அமைப்புகள் உள்ளனவா என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



