காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று மீண்டும் வாக்கு திருட்டு பாஜகவை கடுமையாக குற்றம்சாட்டினார்.., ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் “பிரேசிலிய மாடல்” எனப்படும் ஒரு பெண் பல்வேறு பெயர்களில் பல முறை வாக்களித்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். அவர் இதை “H-Bomb” (Haryana Bomb) எனும் புதிய ஆவணத் தொடரின் ஒரு பகுதியாக வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி “காங்கிரஸ் தேர்தலில் வெறும் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் இதை பாருங்கள் — ‘சீமா, ஸ்வீட்டி’ போன்ற பல பெயர்களில் ஒரே பெண் 22 முறை ஹரியானாவில் வாக்களித்துள்ளார்! அந்த பெண் உண்மையில் ஒரு பிரேசிலிய மாடல், அவரது படம் ஒரு ஸ்டாக் ஃபோட்டோ. இதுபோன்ற 25 லட்சம் போலி பதிவுகள் ஹரியானா வாக்காளர் பட்டியலில் உள்ளன.” என்று தெரிவித்தார்.
ஹரியானா தேர்தல் முடிவுகள் — நெருங்கிய வித்தியாசம்
2024 ஹரியானா சட்டசபை தேர்தலில், பாஜக பெற்றது – 55,48,800 வாக்குகள் (39.94%)
காங்கிரஸ் – மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி பெற்றது – 54,64,975 வாக்குகள் (39.34%)
வித்தியாசம் — மொத்தம் 83,825 வாக்குகள் (0.60%)
இதில், பாஜக 48 இடங்கள் வென்றது; காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றது.
25 லட்சம் வாக்குகள் திருட்டு
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி ” ஹரியானா தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. இதில் 5.21 லட்சம் நகல் வாக்காளர்கள், 93,174 தவறான வாக்குகள், 19.26 லட்சம் குழு வாக்குகள் அடங்கும். இதன் அர்த்தம் ஹரியானா வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு 8 வாக்காளரிலும் ஒருவர் போலி.” என்று கூறினார்..
“இந்தியாவின் இளம் தலைமுறை GenZ இதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இது உங்கள் எதிர்காலத்தைப் பற்றியது. நாங்கள் தேர்தல் ஆணையத்தையும், இந்திய ஜனநாயக முறையையும் கேள்வி எழுப்புகிறோம் — ஆனால் 100% ஆதாரங்களுடன். காங்கிரஸின் மிகப்பெரிய வெற்றியை தோல்வியாக மாற்ற ஒரு திட்டம் திட்டமிட்டே நடைமுறைக்கு வந்தது.
ராகுல் காந்தி மேலும் “ஒரே நபரின் புகைப்படம் இரண்டு வாக்குச்சாவடிகளில், 223 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் (EC) ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் CCTV பதிவுகளை அழிக்கிறது. 1.24 லட்சம் போலி புகைப்படங்கள் ஹரியானா வாக்காளர் பட்டியலில் உள்ளன. தேர்தல் ஆணையத்திடம் இருந்தும், நகல் வாக்காளர்களை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
3.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
“தேர்தலுக்கு முன் 3.5 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
இது முழுமையாக பாஜக அரசுக்கு சாதகமான முடிவை உருவாக்க செய்யப்பட்டது,” என ராகுல் கூறினார்.
EC, பாஜக, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டு
ராகுல் காந்தி, “மக்களிடம் தேர்தல் ஆணையர் பொய் கூறுகிறார், வீடற்ற வாக்காளர்கள் என்ற பெயரில் பட்டியலில் முறைகேடுகள் நடக்கின்றன,”
என்றும், “பாஜக பெருமளவில் தேர்தல் மோசடி செய்துள்ளது. ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் ஒரே நபர்கள் வாக்களித்துள்ளனர்,”
என்றும் குற்றம்சாட்டினார்.
“இன்று இந்திய ஜனநாயகம் மரணமடைந்து வருகிறது.
மோடி, அமித்ஷா, தேர்தல் ஆணையம் — மூவரும் கூட்டணியாக செயல்பட்டு, அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் அழிக்கிறார்கள்.. இது தான் இன்றைய இந்திய ஜனநாயகத்தின் உண்மை நிலை.. சுதந்திரம் மற்றும் நம்பிக்கையை அழிக்கும் திட்டமிட்ட செயல்பாடு நடக்கிறது.” என்று தெரிவித்தார்..
ராகுல் காந்தியின் “H-Bomb” குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் இதற்கு இன்னும் அதிகாரபூர்வ பதில் அளிக்கவில்லை.



