தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள், இசைஞானி இளையராஜா என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
கடந்த வாரம் சென்னையில் உள்ள நடிகர் விஷால், நடிகை த்ரிஷா, இயக்குனர் மணிரத்னம் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. எனினும் அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த சூழலில் நேற்று மீண்டும் த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சோதனையில் அது புரளி என்பது உறுதியானது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள நடிகர் அஜித் குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. அதே போல் திரைப்பிரபலங்கள் எஸ்.வி.சேகர், ரம்யா கிருஷ்ணன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வீடுகளுக்கும் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது.. மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டிலும், சத்தியமூர்த்தி பவன் ஆகிய இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக கூறப்பட்டது.
டிஜிபி அலுவலகத்திற்கு வந்த இமெயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.. இதையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் இந்த இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.. இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது..



