மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. சொந்தமாக தொழில் செய்ய முடியாமல், ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய முடியாமல் சிறப்புத் திறன் இல்லாத மக்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இது முழுக்க முழுக்க உடல் உழைப்பு சார்ந்தது. ஒரு ஆண்டுக்கு 100 வேலை நாட்கள் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனால் இத்திட்டம் 100 நாள் வேலைத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போதைய அறிவிப்பின் படி, இந்த ஊழியர்களுக்கான சம்பளம் 7 ரூபாய் முதல் 26 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. புதிய உயர்வின்படி ஹரியானா மாநிலத்தில் அதிகபட்ச சம்பளம் உள்ளது. அங்கு நாள் ஒன்றுக்கு 357 ரூபாயும், குறைந்தபட்ச சம்பளம் சத்தீஸ்கரில் 221 ரூபாயும் வழங்கப்படுகீறது.
இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஏப்.2ஆம் தேதி முதல் ரூ.294 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப்படும் என்றும் தமிழ்நாட்டில் 2,500 ஊராட்சிகளில் உள்ள பள்ளி சீரமைப்புகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 2.16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.