கொரோனா காலகட்டத்தில் மொபைல் வைத்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் தற்போது யூடியூப் சேனல் தொடங்கிவிட்டனர். தற்போதுள்ள சூழலில் ஸ்மார்ட் போன் பயன்பாடு மக்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது. அதில், யூடியூப் வீடியோவை பார்த்தால் பணம் கிடைக்கும் என நம்பி பலர் பணத்தை இழந்து வருகின்றனர். இதனை வைத்து லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து கவனமாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், யூடியூபில் விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என ஏமாற்றி லட்சக்கணக்கானோரிடம் நூதன முறையில் மோசடி நடைபெற்றது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மைவி3ஆட்ஸ் நிறுவனத்தின் மீது கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் கோவையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு வருவாய் வழங்கும் ஆன்லைன் செயலிக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறி அவர்கள் ஒன்று கூடினர். இதனால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விளம்பரம் பார்த்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக தனியார் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக திடீரென 10,000 பேர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகர சைபர் கிரைம் காவலர் இதுகுறித்து “நான் சமூக வலைத்தளங்களில் சைபர் குற்றங்கள் குறித்த தகவல்களை பார்த்த போது, அதில் யூடியூப் ஒன்றில் தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பர வீடியோவை பார்த்தேன். அந்த வீடியோவில் ரூ.5 முதல் ரூ.1,800 வரை சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த விளம்பரத்தில் பல்வேறு நிலைகளில் பல்வேறு தொகைகளை செலுத்தி உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு சேர்ந்த நபர்கள் அவர்களுக்கு கீழ் மேலும் புது நபர்களை அறிமுகப்படுத்தும்போது அவருக்கு ஏற்கனவே இருக்கும் உறுப்பினரில் இருந்து பதவி உயர்வு கொடுத்தும், புதிதாக சேரும் நபர்கள் கட்டும் தொகைக்கு ஏற்பவும், தினமும் விளம்பரம் பார்த்தால் அதிக வருமானம் ஈட்டலாம் எனவும் பேராசையை தூண்டும் வகையில் அந்த விளம்பரம் இருந்தது. அவ்வாறு பெருந்தொகை கட்டி சேரும் நபர்களுக்கு விளம்பரம் பார்த்தால் பணம் கொடுப்பதாக கூறுவதில் எந்தவித சாத்திய கூறும் இல்லை என்பதை மக்கள் விழிப்புணர்வுடன் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.