நெல்லை டவுன் பகுதியைச் சார்ந்த 13 வயது மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை டவுன் தைக்கா தெருவை சார்ந்தவர் மைக்கேல் ராஜ் இவரது மனைவி மேரி. இவர்களுக்கு தருண் என்ற மகனும் ஒரு மகளும் இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைக்கேல் ராஜ் உயிரிழந்து விட்ட நிலையில் அவரது மனைவி மேரி தனியார் நிறுவனம் ஒன்றில் கஷ்டப்பட்டு வேலை செய்து தனது குழந்தைகளை படிக்க வைத்து வந்தார்.
இந்நிலையில் நேற்று தனது வீட்டில் இருந்த சிறுவன் தருண் திடீரென அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனையடுத்து அவனை மீட்ட தாய் மேரி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தருணுக்கும் அவரது சகோதரிக்கும் செல்போனை யார் பயன்படுத்துவது என்ற பிரச்சனையில் கோபமடைந்த சிறுவன் தருண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. கல்விக்காக மாணவர்களின் கைகளுக்குள் சென்ற செல்போன்கள் அவை இல்லாமல் இன்று அவர்களால் இருக்கவே முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. இளைய சமூகம் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு விளையாட்டு போன்ற ஆரோக்கியமான விஷயங்களில் ஈடுபட வேண்டும் .