பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் 14 மொபைல் செயலிகளை முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, தகவல்களைச் சேகரித்துப் பரப்புவதற்குப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 14 மொபைல் செயலிகளை முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மொபைல் அப்ளிகேஷன்களை காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் தரைமட்ட பணியாளர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செயலிகளில் Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second line, Zangi, Threema உள்ளிட்டவை அடங்கும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்படும் பிற புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மற்றும் இந்திய சட்டங்களைப் பின்பற்றாத இதுபோன்ற பயன்பாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் இந்த பயன்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.