“என் மண், என் மக்கள் ” என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கினார். இதைத்தொடர்ந்து, நடைபயணத்தின் போது பொதுமக்களிடம் பேசிய அண்ணாமலை, ”தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் பகுதி அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரத்தில் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் 30% வரை தொழில் நிறுவனங்களிடம் கமிஷன் கேட்கும் காரணத்தினால் இங்கு முதலீடு செய்து தொழிற்சாலைகளை கொண்டு வர முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரும்பாலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்து சேரவில்லை. காரணம் கமிஷன் தான். பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் உத்தரப்பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் தொழில்களை தொடங்க முன்னுரிமை கொடுப்பதால் தமிழ்நாடு பொருளாதாரத்தில் மூன்றாம் இடத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மோடி அரசியலுக்கு எதிராக அரசியல் செய்ய யாருமில்லை. தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சாதாரண சாலை வசதி கூட ஏற்படுத்த துப்பில்லாமல் திராவிட மாடல் அரசு உள்ளது.
2024 மக்களவை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 70 ஆண்டு கால ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக தான் இருந்து வருகிறது. திமுகவில் உள்ள 35 அமைச்சர்களில் 15 அமைச்சர்களுக்கு ஊழல் செய்ததாக வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.ட்