வாச்சாத்தி கிராமத்தில் தேடுதல் வேட்டை என்ற பெயரில் வன்முறை மற்றும் வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி வனத்துறையினர், போலீசார் மற்றும் வருவாய்த் துறையை சேர்ந்த அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின்போது, அந்த கிராமத்தில் இருந்த இளம் பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள், ஐ.எப்.எஸ். அதிகாரிகள் 4 பேர் உள்பட வனத்துறையினர், காவல்துறை, வருவாய்த் துறையினர் என மொத்தம் 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். மீதமுள்ளவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது.