தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமீபகாலமாக வதந்தி பரவி வருகிறது. இதுதொடர்பான போலி வீடியோக்களும் பரவியது. இதனால் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.. இந்த சூழலில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.. சமூக ஊடகங்கள் வதந்தி பரப்பி சில கீழ்த்தரமாக அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.. இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பினால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்திருந்தார். இதை தொடர்ந்து, வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதாகவும், தகவல் பரவியது.. எனினும் ஹோலி பண்டிகைக்காகவே அவர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர் என்பது பின்னர் தெரியவந்தது..
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/03/north-india-workers.jpg)
இதனிடையே நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில், ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவினர் ஆரம்பித்த நடவடிக்கையின் காரணமாக இன்று வடமாநிலத்தவர் தாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.. மேலும் திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு கலாச்சாரத்தின் விளைவு தான் இந்த நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டி இருந்தார்..
இந்த சூழலில் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் நடந்து கொண்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டது, இரு பிரிவினரிடையே மோதலை தூண்டுவது, வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவிப்பது என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன்.
திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார்..